காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பழனிசாமி

காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழுவையும் உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் நான்காவது
காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பழனிசாமி

காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழுவையும் உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற நீதி ஆயோக் நான்காவது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார். 
கூட்டத்துக்குப் பின்னர், தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:
விவசாயிகள் வளம் பெற நவீன விவசாய விற்பனைக் கூடங்களை ஏற்படுத்த நிதி வழங்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்களை நகரங்களில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி உள்ளிட்ட உரிய கட்டமைப்புகளை உருவாக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரிகள்: ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய இரு மாவட்டங்கள் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் மாவட்டங்கள் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க வலியுறுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பல் மருத்துவக் கல்லூரியை அமைப்பதற்கான அனுமதியை விரைந்து அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி ரூ.500 கோடி நிதி வழங்கவும், ரூ.10 கோடி நிதி வழங்கி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை மேம்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.
காவிரி மேலாண்மை ஆணையம்: அனைத்து அதிகாரம் படைத்த 'காவிரி நீர் மேலாண்மை ஆணையம்', 'காவிரி நீர் முறைப்படுத்தும் குழு' ஆகியவற்றை அமைப்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தேன். இவ்விரு அமைப்புகளையும் உடனடியாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினேன். 
நிதிப் பங்கீடு: பதினைந்தாவது நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அதில் 2011- ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பைக் கணக்கில் கொண்டு நிதிப் பங்கீடு செய்வதாக உள்ளது. இது தமிழக மக்களின் நலனுக்கு எதிராக உள்ளதால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கை அடிப்படையாகக் கொண்டு நிதிப் பங்கீட்டை வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் முடிந்த பின்னர், தமிழகத்தின் நிலைமை, நிதித் தேவைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன் என்றார் முதல்வர் பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com