இந்தியா-சீனா இடையே மீண்டும் எல்லைப் பிரச்னை ஏற்படக் கூடாது: சீனத் தூதர் லோ சாங்குயி

இந்தியா- சீனா இடையே டோக்கா லாம் போல மீண்டும் ஒரு எல்லைப் பிரச்னை ஏற்படக் கூடாது என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் லோ சாங்குயி கூறியுள்ளார்.

இந்தியா- சீனா இடையே டோக்கா லாம் போல மீண்டும் ஒரு எல்லைப் பிரச்னை ஏற்படக் கூடாது என்று இந்தியாவுக்கான சீனத் தூதர் லோ சாங்குயி கூறியுள்ளார்.
இந்திய-சீன உறவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாடு குறித்து சீன தூதரகம் சார்பில் தில்லியில் திங்கள்கிழமை கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற லோ சாங்குயி மேலும் கூறியதாவது:
சீனா-இந்தியா-பாகிஸ்தான் இணைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று இந்தியாவைச் சேர்ந்த சில நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இது மிகச் சிறந்த யோசனையாகும். சீனா-ரஷியா-மங்கோலியா இணைந்து ஏற்கெனவே இதுபோன்ற ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடுகளுடனான உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் இருப்பது அனைத்து நாடுகளுக்கும் சகஜமானதுதான். ஆனால், ஒத்துழைப்பின் மூலமும், நல்லெண்ணத்தை உருவாக்குவதன் மூலமும் நாம் பிரச்னையை தீர்த்துக் கொள்ள முடியும். இந்திய-சீன எல்லைப் பிரச்னை என்பது வரலாற்றுக் காலத்தில் இருந்தே உள்ளது. இரு தரப்பு சிறப்புப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதன் மூலம் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளும் ஒரு தீர்வை எட்ட முடியும். இதுபோன்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது இருதரப்புக்கும் இடையே சிறந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தும். நமது நாடுகளுக்கு இடையே டோக்கா லாம் போல மீண்டும் ஒரு பிரச்னை ஏற்படக் கூடாது.
டோக்கா லாம் பிரச்னை முடிந்த பிறகு இந்திய- சீன உறவில் சிறந்த மாற்றம் உருவாகியுள்ளது. இரு நாடுகளின் தலைவர்களும் பல்வேறு நிகழ்வுகளில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். திபெத்தில் உள்ள கைலாயம் - மானசரோவருக்கு யாத்திரை மேற்கொள்ளும் இந்திய பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை சீனா அளிக்கும். இந்தியாவும், சீனாவும் இணைந்து ஆப்கானிஸ்தானில் ரயில் போக்குவரத்தை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளன. எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து இதுபோன்ற பல திட்டங்களை மேற்கொள்ளும் என்றார்.
இந்தியா-பூடான்-சீனா எல்லையில் உள்ள டோக்கா லாம் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அத்துமீறி நுழைந்து சாலை அமைக்க முயன்ற சீனா ராணுவ வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அப்பகுதியில் தனது ராணுவத்தை சீனா குவித்தது. இந்திய ராணுவ வீரர்களும் அப்பகுதியில் முகாமிட்டனர். இதனால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டது.
சுமார் 73 நாள்கள் நீடித்த இந்தப் பிரச்னை, இரு தரப்பும் ராணுவத்தை திரும்பப் பெற ஒப்புக் கொண்டதை அடுத்து முடிவுக்கு வந்தது. 
அதன் பிறகு, இருநாட்டு உறவை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்தனர். இம்மாதத் தொடக்கத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டிலும் இரு தலைவர்களும் சந்தித்தனர். இதையடுத்து இரு நாட்டு உறவு மேம்பட்டது.
அதற்கு முன்பு, ஷி ஜின்பிங் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியா வந்தபோது, குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com