வைர வியாபாரி நீரவ் மோடியின் கடவுச்சீட்டை இந்திய அரசு ரத்து செய்த தகவல் இன்டர்போல் தரவுத்தளத்தில் சேர்க்கப்பட்ட பிறகும், அவர் தடையின்றி வெளிநாடுகளிடையே பயணித்து வருவதாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயாள் கூறியதாவது:
நீரவ் மோடியின் கடவுச்சீட்டு வெளியுறவு அமைச்சகத்தால் ரத்து செய்யப்பட்ட பிறகு, அதுதொடர்பான தகவல் இன்டர்போல் மூலமாக கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி டிஃப்யூஷன் நோட்டீஸ்'-இல் (குற்றம்சாட்டப்பட்டவர்கள் குறித்த தகவலை தெரிவிக்கக்கோருவது) தெரிவிக்கபட்டிருந்தது.
நீரவ் மோடி கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட தகவல் இன்டர்போல் தரவுத்தளத்தில் ஏற்றப்பட்ட பிறகு, அதன் உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் தெரியவந்திருக்கும். இந்திய அரசு நீரவ் மோடிக்கு 5 கடவுச்சீட்டுகள் வழங்கியிருந்த தகவலும் இன்டர்போலுக்கான குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் பிறகும், நீரவ் மோடி தடையின்றி வெளிநாடுகளிடையே பயணித்து வருகிறார்.
பிரிட்டன் அளித்துள்ள தகவலின்படி, நீரவ் மோடி கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்ட தகவல் இன்டர்போலில் வெளியிடப்பட்ட பிறகு, மார்ச் 15-ஆம் தேதி அவர் லண்டனின் ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து ஹாங்காங்கிற்கு சென்றுள்ளார். மார்ச் 28-ஆம் தேதி நியூயார்க்கின் ஜேஎஃப்கே விமான நிலையத்திலிருந்து லண்டனின் ஹீத்ரோவ் விமான நிலையத்துக்கும், மார்ச் 31-ஆம் தேதி அதே ஹீத்ரூ விமான நிலையத்திலிருந்து பாரீஸின் விமான நிலையத்துக்கும் பயணித்துள்ளார்.
இன்டர்போல் மூலமாக சிபிஐ அளித்திருந்த டிஃப்யூஷன் நோட்டீஸ்' அடிப்படையில் பிரிட்டன் இந்தத் தகவலை பகிர்ந்துள்ளது. எனினும், நீரவ் மோடி இருக்கும் இடம் குறித்த உறுதியான தகவல் கிடைக்கப்பெறவில்லை என்று அபிஷேக் தயாள் கூறினார்.