போபால்: பிரதமர் மோடி திருமணம் ஆகாதவர் என்று குஜராத் முன்னாள் முதல்வரும், மத்திய பிரதேசத்தின் தற்போதைய ஆளுநருமான ஆனந்தி பென்னின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டவுடன் குஜராத் முதல்வர் பதவியில் இருந்து நரேந்திர மோடி விலகிய பொழுது, அவருக்குப் பதிலாக அந்த பொறுப்பிற்கு வந்தவர் ஆனந்தி பென். தற்பொழுது அவர் மத்திய பிரதேச மாநில ஆளுநராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் அங்குள்ள கர்தா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த அவர், திமாரி என்ற இடத்தில் நடைபெற்ற அங்கன்வாடி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது நரேந்திர மோடியினைப் பற்றி அவர் கூறியதாவது:
நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் திருமணம் ஆகாதவர் என்றாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்சனைகள் குறித்து நன்றாக அறிந்தவர். குழந்தைகள் பிறப்பதற்கு முன்பும், பிறந்த பிறகும் ஏற்படும் பிரச்சனைகள் பற்றியும் தெரிந்தவர்
இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் மோடி தனது இளம் வயதில் ஜசோதா பென் என்பவரை திருமணம் செய்திருந்தார். ஆனால், அந்த திருமணமானது நீண்ட காலம் நீடிக்கவில்லை. திருமணமான குறுகிய காலத்திலேயே அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.
2014 பாராளுமன்ற தேர்தலின் போது கூட மோடி தனது வேட்பு மனுவில் ஜசோதா பென் தனது மனைவி என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் நரேந்திர மோடி திருமணம் ஆகாதவர் என்று ஆனந்தி பென் தற்போது பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.