பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு இல்லை

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு இல்லை

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதார மேம்பாடு குறித்து முகநூலில் (பேஸ்புக்) அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த காலத்தைவிட எதிர்காலத்தில் மிகவும் சிறப்பானதாகவே இருக்கும். சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக நமது நாடு உருவெடுத்துள்ளது. இந்த வளர்ச்சி மேலும் பல ஆண்டுகளுக்கு தொடரும்.
அண்மை காலத்தில் ரூபாய் நோட்டு வாபஸ், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல், திவால் சட்ட மசோதா போன்ற நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. சிலர் இதனை கடுமையாக எதிர்த்ததுடன் கடுமையாக விமர்சித்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பொருளாதார வளர்ச்சி அந்த அளவுக்கு குறைந்துவிடவில்லை என்பதன் மூலம் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானவை என்பது உறுதியாகியுள்ளது.
2017-18 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.7 சதவீதமாக இருந்தது. இதன் மூலம் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா தக்கவைத்துக் கொண்டது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்காலத்தில் தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து அல்ல. அது, சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் பலருடைய கணிப்பாகும்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட வாய்ப்பு இல்லை. குடிமக்கள் நேர்மையாக வரியைச் செலுத்த வேண்டும். இதன் மூலம் அரசு வருமானத்துக்காக எரிபொருள் மீதான வரியில் இருந்து கிடைக்கும் வருவாயைச் சார்ந்திருப்பது குறையும்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நாட்டின் பொருளாதாரத்தை மோசமான நிலையில் விட்டுச் சென்றது. அதனை பாஜக தலைமையிலான அரசுதான் சீர்படுத்தி வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து வந்துள்ளது. பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை ஒரு லிட்டருக்கு ரூ.25 வரை குறைக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் (ப.சிதம்பரம்) ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார். உண்மையில் இது பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கான யோசனையாகும். இந்தியாவை மீளமுடியாத கடன் சுமைக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் அவரது உள்நோக்கமாக உள்ளது. நாட்டின் நிதிக்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மட்டுமே இந்த அரசு மேற்கொள்ளும் ஜேட்லி தனது பதிவில் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com