தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்யும் விஷயத்துக்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று (புதன்கிழமை) தில்லிக்கு சென்றார். இதையடுத்து, அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை மாலை அவரது இல்லத்தில் வைத்து நேரில் சந்தித்தார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு பேட்டியளித்த கமல்ஹாசன் கூறுகையில்,
"ராகுல் காந்தியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். நாங்கள் இருவரும் அரசியல் குறித்தும் பேசினோம். கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தமிழக அரசியல் குறித்து பேசினோம்" என்றார்.
இந்த சந்திப்பு குறித்து ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது,
"கமல்ஹாசனுடனான சந்திப்பு மகிழ்ச்சியளிக்கிறது. 2 கட்சிகள் (காங்கிரஸ் - மக்கள் நீதி மய்யம்) குறித்து நிறைய ஆலோசனை நடத்தினோம். தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்தும் பேசினோம்" என்றார்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவின் போது சந்தித்து பேசினர்.