ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்டுள்ள ஆளுநர் ஆட்சியால் அங்கு நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைகள் பாதிக்காது என ராணுவத் தளபதி பிபின் ராவத், புதன்கிழமை தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் ஆளும் பிடிபி கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மெஹபூபா முஃப்தி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்துவதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இந்நிலையில், ராணுவத் தளபதி பிபின் ராவத், கூறுகையில்,
ரம்ஜானை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் இந்திய ராணுவத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால், அப்போது ஏற்பட்ட விளைவுகள் அனைத்தும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இதனிடையே தற்போது ஏற்பட்டுள்ள ஆளுநர் ஆட்சியால் பங்கரவாதத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது. இதுவரை எடுக்கப்பட்ட அதே நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் இனியும் தொடரும்.
பங்கரவாதத்துக்கு எதிரான ராணுவ நடவடிக்கைளில் எந்த அரசியல் குறுக்கீடுகளும் இல்லை என்றார்.