ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் ஔரங்கசீப் குடும்பத்தினருடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை சந்தித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் புலவாமா பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஔரங்கசீப், ஈகைத் திருவிழாவை முன்னிட்டு தனது வீட்டுக்கு வரும் வழியில் பட்டப்பகலில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். இதையடுத்து அம்மாநில காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
பின்னர், ஜூன் 14-ஆம் தேதி அவரது உடல் மீட்கப்பட்டது. பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டும், சுடப்பட்டும் அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது மரணத்துக்கு காரணமான பயங்கரவாதத்தை ஒழிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு ஔரங்கசீப் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஔரங்கசீப் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
உயிரிழந்த ராணுவ வீரர் ஔரங்கசீப் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகத் தான் இங்கு வந்தேன். ஆனால் இங்கு வந்த பிறகுதான் இந்தியாவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஒரு ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து தெரிந்துகொண்டேன் என்றார்.