மோடி திருமணமாகாதவர் என்று கூறிய மத்தியப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேலின் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக மோடியின் மனைவி ஜசோதா பென் கூறியுள்ளார்.
குஜராத்தின் முன்னாள் முதல்வரும், மத்தியப் பிரதேச ஆளுநருமான ஆனந்திபென் பட்டேல், சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி திருமணமாகாதவர் என்று கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.
இந்த நிலையில், மோடியின் மனைவி ஜசோதா பென் இது குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
செல்போன் விடியோ மூலம் பேசியுள்ள மோடியின் மனைவி ஜசோதா பென், நரேந்திர மோடிக்கு திருமணமாகவில்லை என்று ஆனந்திபென் பட்டேல் கூறியிருப்பதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடந்த 2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனக்கு திருமணமாகிவிட்டது என்று அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அதில் எனது பெயரையும் மனைவி என்று குறிப்பிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நன்கு படித்த ஒரு பெண்மணியே (குஜராத்தின் முன்னாள் முதல்வர் ) இப்படி, ஒன்றும் தெரியாத ஆசிரியர் (ஜசோதா பென்) போல பேசியிருப்பது சரியல்ல. அதுமட்டுமல்ல, அவர் புகழ்வதாக நினைத்து பிரதமர் மோடியின் கௌரவத்தைக் குறைத்துள்ளார். அவர் (மோடி) எனக்கு மிகவும் மரியாதைக்குரியவர். அவர்தான் என் ராமர் என்று ஜசோதா பென் கூறியிருக்கிறார்.