புது தில்லி: தமிழகத்தில் நிலவும் சில அரசியல் அவலங்கள் குறித்து சோனியாவுடன் பேசியதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கூறியுள்ளார்.
தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான முறையான அங்கீகாரம் பெறுவது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் பேசுவதற்காக கமல்ஹாசன் புதனன்று தில்லி சென்றார். சந்திப்புக்குப் பிறகு புதன் மாலை அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து சோனியா காந்தியையும் அவர் சந்திப்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் சில அரசியல் அவலங்கள் குறித்து சோனியாவுடன் பேசியதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கூறியுள்ளார்.
சோனியாவை அவரது இல்லத்தில் வியாழன் காலை அவர் சந்தித்து உரையாடினார். சந்திப்புக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:
சோனியா அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்து பேசினேன். நேற்று ராகுல் அவர்களை சந்தித்தேன். பின்னர் இன்று சோனியா அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்துள்ளேன்.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் குறித்துப் பேசினோம். சில அரசியல் அவலங்கள் குறித்தும் பேசினோம். தேசிய விவகாரங்கள் குறித்தும் உரையாடினோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.