வருமான வரி சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.
பெங்களூரு கனகபுரா சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற 4-ஆவது சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு வருமான வரித் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து, பாஜகவில் ஊழல் செய்தவர்களின் டயரி என்னிடம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். அவரிடம் ஊழல் செய்தவர்களின் பட்டியல் இருந்தால் அதனை வெளியிடட்டும். அதைவிடுத்து, ஊழல் செய்தவர்களின் பெயர்களை வெளியிடுவதாக மிரட்டுவது முறையல்ல.
வருமான வரித் துறையினர் காங்கிரஸ் கட்சியினரை மட்டுமே குறிவைத்து சோதனை செய்து வருவதாகவும், இது பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சிப்பதில் உண்மையில்லை. வரி ஏய்ப்பு உள்ளிட்ட தவறுகளை யார் செய்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவர். இதற்கு டி.கே.சிவக்குமார் மட்டும் விதிவிலக்கல்ல. தன் மீதான தவறை மறைக்க அவர் காரணம் கூறி வருகிறார் என்றார்.