வதோதரா: பள்ளியின் கழிவறையில், 9ம் வகுப்பு மாணவியின் சடலம் பல கத்திக் குத்துக் காயங்களுடன் மீட்கப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
மாணவியின் உடலில் 10க்கும் மேற்பட்ட கத்திக் குத்துக் காயங்கள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
பரன்போரா பகுதியில் உள்ள பாரதி பள்ளியின் 9ம் வகுப்பு மாணவியைக் கொன்ற அடையாளம் தெரியாத கொலையாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் மதியம் 12 மணியளவில் நடந்திருப்பதாகவும், முக்கிய சாட்சியமாக, பள்ளிக்கு அருகே உள்ள கோயிலில் வீசப்பட்ட பள்ளிப் பை ஒன்றில், மிகக் கூர்மையான கத்தியும், ஒரு குடிநீர் பாட்டிலும், மிளகாய்ப் பொடியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொலையில் ஈடுபட்ட பையன், மாணவியைக் கொலை செய்த பிறகு தான் பயன்படுத்திய பையை இங்கே வீசிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விரைவில் குற்றவாளி பிடிபடுவான் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். குற்றவாளி என்று சந்தேகிக்கப்படும் சிறுவன், இந்த பள்ளியில் ஒரு வாரத்துக்கு முன்புதான் சேர்ந்துள்ளான் என்றும், அவனது பெற்றோர் குஜராத் மாநிலத்தில் வசித்து வருவதால், இப்பகுதியில் தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறான் என்றும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி, குர்கானில் உள்ள தனியார் பள்ளியின் கழிவறையில் சிறுவன் ஒருவன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தையே இது நினைவூட்டுகிறது.