புது தில்லி: ஒரு நபரின் ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) இணைப்பதற்கான எளிய வசதியை வருமான வரித்துறை ஏற்படுத்தியுள்ளது.
வருமான வரித்துறையின் e-filling இணையதளத்தில் இதற்கான தனி லிங்க் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், யார் வேண்டுமானாலும் தனது ஆதார் எண்ணுடன், பான் எண்ணை எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.
incometaxindiaefiling.gov.in என்ற இணைய தளத்தில், அல்லது portal.incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html?lang=eng என்ற லிங்கைப் பயன்படுத்தி ஒருவர் தனது பான் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
பான் எண் மற்றும் ஆதார் எண்ணை சரியாக பதிவு செய்து, ஆதார் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அதே போல தனது பெயரை பதிவு செய்து, கேப்சா கோட் எனப்படும் ஆங்கில எழுத்து மற்றும் எண்களை அப்படியே பதிவு செய்தால் போதும்.
ஆதார் எண் சரிபார்த்த பிறகு, ஆதார் எண்ணும், பான் எண்ணும் இணைக்கப்படும். இதனை உறுதி செய்வதற்கான தகவல் இணையதளத்தில் வரும்.
ஒரு வேளை, பதிவு செய்த தகவலில் ஏதேனும் ஒரு சில பிழை இருந்தால், ஆதார் ஓடிபி (ஒன் டைம் பாஸ்வோர்ட்) தேவைப்படும் என்று தனி நபர்கள் மற்றும் வருமான வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஒன் டைம் பாஸ்வார்ட், பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கோ அல்லது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கோ அனுப்படும்.
இதற்காக, e-filling இணையதளத்தில் லாகின் செய்யவோ, உறுப்பினராக பதிவு செய்யவோ தேவையில்லை. யார் வேண்டுமானாலும் தனது ஆதார் எண்ணுடன் பான் எண்ணை எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது, ஒரு நபர் தனது ஆதார் எண்ணையோ அல்லது ஆதார் பதிவு செய்த விண்ணப்பத்தின் எண்ணையோ நிச்சயம் குறிப்பிட வேண்டியது நிதிச் சட்டம் 2017ன் படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.