ரெய்கார்: மகாராஷ்டிரா மாநிலம் ரெய்கத் மாவட்டத்தில், தான் கருப்பாக இருப்பதாகக் கிண்டல் செய்த உறவினர்களை, உணவில் விஷம் வைத்துக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
உறவினரின், வீட்டு கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்காக சமைக்கப்பட்ட உணவில் அந்த பெண் விஷம் வைத்ததில், 5 பேர் உயிரிழந்தனர்.
மஹத் கிராமத்தில் உள்ள சுபாஷ் மானேவின் வீட்டு கிரகப்பிரவேசம் ஜூன் 18ம் தேதி நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட உணவில், குற்றவாளி பிரக்யா சர்வாஸி என்ற பெண் விஷம் கலந்துள்ளார்.
இந்த உணவை சாப்பிட்ட 4 சிறுவர்களும், ஒரு வயதான நபரும் உயிரிழந்தனர். சுமார் 80 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், ஒரு பெண்ணை கைது செய்து அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குடும்பச் சண்டையில் தான் இந்த செயலை செய்து விட்டதாக அந்த பெண் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 120 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், 5 பேர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.