தண்டவாளத்தை கடக்க முயன்ற மகனை காப்பாற்றிய தாய் உயிரிழந்த சோகம் பெங்களூருவில் சனிக்கிழமை நடந்தது.
பெங்களூருவில் சனிக்கிழமை மட்டும் இரு பெண்கள் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். இதில் மகனை காப்பாற்றிய தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.
அஸ்வினி (வயது 35), தனது மகன் அவதுதா-வை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது வைட்ஃபீல்ட் ரயில் நிலையத்தில் காலை 8:30 மணியளவில் பெங்களூரு - பங்காரபேட் ரயில் வந்துகொண்டிருக்கையில் மகன் அவதுதா, வேகமாக தண்டவாளத்தைக் கடந்துள்ளார்.
இந்நிலையில், ரயில் வருவதைக் கண்ட அவரது தாயார் அஸ்வினி, மகனைக் காப்பாற்றச் சென்றதில் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் மகன் பத்திரமாக தண்டவாளத்தைக் கடந்துவிட்டதாக அப்பகுதி ரயில்வேத்துறை காவலர் தெரிவித்தார்.
அதுபோல தேவனகுன்டே மற்றும் மலூர் ஆகிய பகுதிகளுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில் 70 வயது பெண் காலை 11:50 மணியளவில் ரயில் மோதி உயிரிழந்தார். இருப்பினும் இவ்விபத்து குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.