மேகாலயத்தில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதையடுத்து, அந்த மாநிலத்தில் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை காங்கிரஸ் இழந்தது.
60 உறுப்பினர்களைக் கொண்ட மேகாலய சட்டப் பேரவைக்கு கடந்த பிப்ரவரியில் தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 21 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்தது. ஆனால், 20 இடங்களில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் கட்சி (என்பிபி), பாஜக மற்றும் இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. முதல்வராக என்பிபி கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா உள்ளார்.
இந்நிலையில், ராணிகோர் (தனி) தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மார்ட்டின் எம்.டாங்கோ, தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இதுதொடர்பாக பேரவை துணைத் தலைவரை வியாழக்கிழமை இரவு சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்தார்.
மேலும், காங்கிரஸில் இருந்தும் விலகுவதாக அறிவித்த அவர், மக்களின் விருப்பப்படியே இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.
ராணிகோர் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் 5 முறை எம்எல்ஏவாக தேர்வானவரான மார்ட்டின், என்பிபி கட்சியில் இணையவுள்ளதாகத் தெரிகிறது. ஒரு எம்எல்ஏ ராஜிநாமா செய்ததன் மூலம் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை காங்கிரஸ் இழந்துள்ளது.