புது தில்லி: தில்லி முதல் ஹரியானா வரையிலான மெட்ரோவின் புதிய பச்சை வழித்தட சேவையை பிரதமர் மோடி ஞாயிறன்று தொடங்கி வைத்தார்.
தில்லியின் முண்ட்காவில் இருந்து, ஹரியானாவின் பகதூர்கர் வரையிலான 11 கி.மீட்டர் தொலைவு கொண்ட தடத்தில் பச்சை வழித்தட மெட்ரோ ரெயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலகத்தில் இருந்தபடி காணொளிகாட்சி வழியே ஞாயிறன்று தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி மற்றும் அரியானா முதல்வர் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இன்று மாலை 4 மணியில் இருந்து பொதுமக்களுக்காக இந்த புதிய மெட்ரோ ரெயில் சேவை செயல்பட தொடங்கும்.
இந்த திட்டத்தினை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
பகதூர்கர் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது. அங்கு பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. அங்கிருந்து மாணவர்கள் தில்லிக்கு கூட சென்று பயில்கின்றனர். அரியானாவிற்கு நுழைவு வாயிலாக உள்ள இந்த பகுதியில் தொடங்கவுள்ள மெட்ரோ சேவை அனைவருக்கும் மிக பயனுள்ள வகையில் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.