ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: சுப்பிரமணியன் சுவாமி மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் விசாரணை நடத்தி வரும் அமலாக்கத் துறை அதிகாரி ராஜேஷ்வர் சிங்குக்கு எதிரான வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தொடுத்த மனு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அண்மையில், ராஜ்னீஷ் கபூர் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ராஜேஷ்வர் சிங் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்திருப்பதாகவும், இதுகுறித்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

ராஜேஷ்வர் சிங் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரி. 

ராஜேஷ்வர் சிங்குக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் பொது நல மனுவில், ராஜேஷ்வருக்கு சாதகமாக வாதிட தன்னை அனுமதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ். அப்துல் நாஸர், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் வேறோர் அமர்வு முன்பு வரும் 25ஆம் தேதியன்று அந்த மனுவை தாக்கல் செய்யுமாறு சுப்பிரமணியன் சுவாமியை கேட்டுக் கொண்டனர். 

அதைத் தொடர்ந்து, அந்த மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து இந்து மல்ஹோத்ரா விலகுவதாக திடீரென அறிவித்தார்.

இதற்கிடையில், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு தொடர்பான விசாரணையை தாமதம் செய்யவே இந்த வழக்கை தொடுத்துள்ளதாக ராஜேஷ்வர் சிங் தனக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்த ராஜ்னீஷ் கபூருக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கை தொடுத்தார். இதனை அருண் குமார் மி்ஸ்ரா மற்றும் கௌல் ஆகிய நீதிபதிகளின் அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்நிலையில், ராஜேஷ்வருக்கு எதிரான வழக்கில் அவருக்கு சாதகமாக வாதாட அனுமதி கோரி சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார். அதன்படி இந்த விவகாரத்தில் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com