ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் பனிலிங்க தரிசனத்துக்காக பல லட்சம் பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் இக்காலகட்டத்தில் யாத்திரை செல்வது வழக்கம். அவ்வகையில் 3,380 அடி உயரமுள்ள அமர்நாத் யாத்திரை இம்முறை ஜூன் 28-ஆம் தேதி தொடங்குகிறது.
ஒவ்வொரு வருடமும் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வரும் நிலையில், தற்போது எல்லைப்பகுதியில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். அப்போது ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் இதர ராணுவ அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் நிலவி வரும் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் வோஹ்ராவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.