காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவுவதற்காக 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் திட்டமிட்டு காத்திருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பல்வேறு சட்டவிரோத அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. பத் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
காஷ்மீர் எல்லை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஊடுருவல் சம்பவங்களைத் தடுக்கவும், சதித் திட்டங்களை முறியடிப்பதற்காகவும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு காஷ்மீரைக் காட்டிலும் வடக்கு காஷ்மீரில் தற்போது நிலைமை சற்று நன்றாக உள்ளது. அதற்கு காரணம் அப்பகுதி மக்களும், இளைஞர்களும் அளித்து வரும் ஒத்துழைப்புதான். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
சமீபத்தில் கிடைத்த தகவல்படி காஷ்மீருக்குள் ஊடுருவி சதித் திட்டங்களை அரங்கேற்ற 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் எல்லையோரங்களில் காத்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் 30 பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்.
அவர்களது திட்டங்களை முறியடிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.