ராணுவ அதிகாரியின் மனைவி கொலை செய்யப்பட்டதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ராணுவ மேஜரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
தில்லி பிரார் சதுக்கம் பகுதியில் உள்ள ராணுவ முகாம் வளாகத்தில் சனிக்கிழமை, ராணுவ அதிகாரி ஒருவரின் மனைவி சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் சாலை விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று முதலில் கருதினோம். பின்னர், அவரது கழுத்தில் கத்தியால் ஏற்படுத்தப்பட்ட காயம் இருந்ததை கண்டோம். இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் கணவருடன் பணிபுரியும் ராணுவ அதிகாரியை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். மருத்துவமனையில் அந்தப் பெண்ணை கார் ஓட்டுநர் வெள்ளிக்கிழமை காலை இறக்கிவிட்டு சென்றிருக்கிறார். மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஓட்டுநர் மருத்துவமனைக்கு வந்தபோது அவர் காணாமல்போனது தெரியவந்தது.