தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் 17 எம்எல்ஏக்கள் மனு

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு
தகுதி நீக்கம்: உச்ச நீதிமன்றத்தில் 17 எம்எல்ஏக்கள் மனு

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 17 எம்எல்ஏக்கள் சார்பில் திடீரென மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரத்தை டி.டி.வி. தினகரன் அணியினர் வெளியிட மறுத்துவிட்டனர்.
 டி. டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017, செப்டம்பர் 18-ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை கடந்த ஜூன் 14-ஆம் தேதி வழங்கியது.
 இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக நீதிபதி எஸ்.விமலாவை நியமனம் செய்து, பதிவுத் துறைக்கு நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் கடந்த ஜூன் 18-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
 உச்ச நீதிமன்றத்தில் மனு: இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு 17 எம்எல்ஏக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாக வழக்கில் தொடர்புடைய வழக்குரைஞர்களின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டும் பலனில்லை.
 இந்த வழக்கு தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வட்டாரங்கள் கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை அரசியல் காரணங்களுக்காக ரகசியமாக வைத்திருக்குமாறும், ஊடகங்களுக்கு வெளியிட வேண்டாம் என்றும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.டி. தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக தற்கால அரசியல் வரலாற்றில் மிக முக்கிய வழக்காக இந்த விவகாரம் கருதப்படுகிறது. இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கருத்தாழமிக்க விவரங்கள் இடம் பெற்றுள்ளன' எனத் தெரிவித்தன.
 இருப்பினும், இந்த வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள 3-ஆவது நீதிபதி எஸ்.விமலா தொடர்பாக டி.டி.வி. தினகரன் தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே இந்த வழக்கை வேறொரு நீதிபதியோ அல்லது வேறு நீதிமன்றமோ விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி எம்எல்ஏக்கள் மனு தாக்கல் செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com