மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான தர நிர்ணயங்களை வகுப்பதற்கு குழு அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
"மெட்ரோ மனிதர்' என்றழைக்கப்படும் ஈ.ஸ்ரீதரன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படவுள்ளது. இவர், கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரை தில்லி மெட்ரோ நிர்வாகத்தின் மேலாண் இயக்குநராக பதவி வகித்தார்.
தில்லியின் முண்ட்கா-பகதூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் கூறியதாவது: "இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுவது அதிகரிக்கப்பட வேண்டும். தில்லி மெட்ரோ மற்றும் இதர நகரங்களில் மெட்ரோ சேவைகளை நாம் பெற சில நாடுகள் உதவின.
தற்போது, மற்ற நாடுகளுக்கு நாம் மெட்ரோ ரயில் பெட்டிகளை உருவாக்கித் தந்து உதவி செய்கிறோம். மெட்ரோ ரயில் பெட்டி உருவாக்கத்தில் கூட்டாட்சித் தத்துவமும் அடங்கியிருக்கிறது. மெட்ரோ ரயில் பெட்டிகள் உருவாக்கத்தில் மாநில அரசும், மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறது. புதிய இந்தியாவை உருவாக்க நவீன உள்கட்டமைப்புகள் தேவை என்று மோடி தெரிவித்தார்.