சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் பருவநிலை மாற்றங்களை குறைப்பதில் இந்தியா சர்வதேச அளவில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. உலக சுற்றுச்சூழல் வசதிகளுக்கான திட்ட மாநாடு வியட்நாமில் ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், இந்தியாவின் பிரதிநிதியாக அபர்னா சுப்பிரமணி கலநதுகொண்டார்.
உலக வங்கியில் இந்தியாவின் பிரதிநிதியாக இருக்கும் அபர்னா வங்கதேசம், பூடான், மால்தீவ்ஸ், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சார்பிலும் இவர் பங்கேற்றார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அவர், அடுத்த 4 ஆண்டுகளுக்கான முதலீட்டு சுழற்சியில் இந்தியா தனது மானியத்தை 15 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்துவதாக தெரிவித்தார். இதுவரை இந்தியா 12 மில்லியன் டாலர் தான் மானியமாக வழங்கி வந்தது. தற்போது 3 மில்லியன் அமெரிக்க டாலரை இந்தியா உயர்த்தியுள்ளது.
இந்த திட்டங்களின் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெறும் மானியங்கள் 4 ஆண்டுகளுக்கு அப்படியே இருந்துவிடக்கூடாது என்றும் அவர் இந்த மாநாட்டில் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக 1992-இல் ரியோவில் நடைபெற்ற மாநாட்டுக்குப் பிறகு முதன்முதலாக இந்த உலக சுற்றுச்சூழல் வசதிகளுக்கான திட்டங்கள் அமைக்கப்பட்டது.