ஜம்மு: விருந்தினர்களான அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ஹிஸ்புல் முஜாகிதின் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள அமர்நாத் மலைப்பகுதியில் ஆண்டுதோறும் இயற்கையிலேயே பனிலிங்கம் உருவாகிறது. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உருவாகும் இந்த பனிலிங்கத்தைக் காண்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக உள்ளது. முறையான அனுமதி வழங்கி அவர்கள் யாத்திரை செல்ல மாநில அரசு அனுமதி வழங்குகிறது.
இதன் பொருட்டு ஜம்முவின் பாக்வதி நகரில் அமர்நாத் மலையடிவாரப் பகுதியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 2 லட்சம் பேர் யாத்திரைக்காக தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
புனித யாத்திரைக்கான முதல் குழு புதனன்று தங்களது பயணத்தைத் தொடங்கியது. மொத்தம் 2,995 யாத்திரிகர்கள் முதல் பயணக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 2334 பேர் ஆண்கள். 520 பேர் பெண்கள், 21 பேர் குழந்தைகள் மற்றும் 120 சாதுக்களும் பயணத்தில் பங்கு கொண்டுள்ளனர்.
யாத்ரீகர்களின் பாதுகாப்புக்காக சிஆர்பிஎப் துணை ராணுவத்தினர், உள்ளூர் போலீஸார் என மொத்தம் 40 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விருந்தினர்களான அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ஹிஸ்புல் முஜாகிதின் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது
ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாதிகள் வெளிட்ட ஆடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எங்களது போராட்டம் எனது இந்திய அரசுக்கு எதிராக தான். காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள இந்திய அரசை அங்கிருந்து விரட்டுவது மட்டும்தான் எங்கள் இலக்கு. இந்திய மக்களை நாங்கள் தாக்க மாட்டோம். அதுவும் புனித யாத்திரை மேற்கொள்ள வந்துள்ள விருந்தினர்களான பக்தர்களை மீது வன்முறையை ஏவி விட நாங்கள் திட்டமிடவில்லை. எனவே பக்தர்கள் எந்தவித பயமும் இன்றி அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.