கடந்த 2016 செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் பகுதியில் உள்ள காஷ்மீர் பகுதிக்கு சென்று இந்தியா ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதனை சர்ஜிகல் ஸ்டிரைக் என்று அழைக்கப்பட்டது. இந்த சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து அப்போது ஆளும் மத்திய அரசு பொய் கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், இந்தியா நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கின் விடியோ காட்சிகள் பொது தளங்களில் வெளியானது. இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சர்ஜேவாலா வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
"உத்தரப் பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்காக, பாஜக வெட்கமின்றி சர்ஜிகல் ஸ்டிரைக்கை பயன்படுத்துகிறது. பிரதமர் மோடி அரசு ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்ற முழக்கத்தை பயன்படுத்தி சர்ஜிகல் ஸ்டிரைக் மூலம் வாக்குகளை பெற முயற்சிக்கிறது.
தங்களை போல, வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் தங்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகளை இது போன்று பயன்படுத்தினார்களா என்று நாடு கேள்வி எழுப்புகிறது.
ஆளும் கட்சி, ராணுவ வீரர்களின் தியாகங்களை தங்களுக்காக வாக்குகளை சேகரிக்க பயன்படுத்தக்கூடாது. மோடி தோல்வியடையும் போதோ அல்ல அமித்ஷா தோல்வியடையும் போதோ அவர்கள் ராணுவத்தின் பெருமையை தங்களது அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால், அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். "
காஷ்மீரில், பாகிஸ்தான் ஆதரிக்கும் தீவிரவாதத்தை அரசு தடுக்க தவறிவிட்டது" என்றார்.
மற்றொரு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், "ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கூட சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. ஆனால், அதற்கான பெருமையை காங்கிரஸ் தேடவில்லை" என்றார்.