ஜம்மு-காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் பரவியுள்ள பயங்கரவாதிகளை அழிக்கும் விதமாக இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் அங்கு நடைபெறும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய ராணுவம் பதிலடி அளித்தது. இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும், அங்கு இந்திய ராணுவத்துக்கு எதிராக நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் 15 வயது சிறுவன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தான். கல்வீச்சில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ராணுவம் நடத்திய பதிலடியில் மேலும் 8 பேரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூடு மற்றும் கல்வீச்சு சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில், புலவாமா மாவட்டத்தில் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க இணைய வசதியும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.