கர்வார்: எதிர்க்கட்சிகள் அனைத்தையும் விலங்குகளுடன் ஒப்பிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் அனந்த ஹெக்டே மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம் கர்வார் பகுதியில் பாஜக தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே தலைமை வகித்துப் பேசினார். அப்பொழுது அவர் பேசியதாவது:
வரவிருக்கும் தேர்தல் களத்தில் ஒருபுறம் காகங்கள், குரங்குகள், நரிகள் என அனைத்து பிற விலங்குகளும் ஒன்றாக உள்ளன. ஆனால் மறுபக்கம் நம்மிடம் புலி உள்ளது. எனவே 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், நீங்கள் அனைவரும் புலியை தேர்வு செய்ய ஏதுவாக வாக்களிக்கவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரணியில் திரளும் வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் பரவலாக கருதுகிறார்கள். இந்நிலையில் மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டேவின் இப்பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.