ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.
லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை காலை 7.30 மணியளவில் தில்லி சிபிஐ அதிகாரிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். குடியுரிமைத் துறை அதிகாரிகளின் அறையில் சுமார் 2 மணி நேர விசாரணைக்குப் பிறகு, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதாக சிபிஐ அதிகாரிகள் அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தை தனியார் விமானம் மூலம் தில்லிக்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இதன்பின்னர் தில்லி பாட்டியாலா வளாகத்தில் உள்ள பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சுமீத் ஆனந்த் முன்பு கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிபதியின் உத்தரவுப்படி கார்த்தி சிதம்பரத்தை வியாழக்கிழமை (மார்ச் 1) சிபிஐ அதிகாரிகள் நீதிபதி சுமீத் ஆனந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, கார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 5 நாள் சிபிஐ காவல் (மார்ச் 6-ஆம் தேதி வரை) நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இக்காலகட்டத்தில் காலை மற்றும் மாலை 1 மணி நேரம் வரை தன்னுடைய வழக்கறிஞருடன் சந்திக்க கார்த்தி சிதம்பரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல பரிந்துரைகளின் அடிப்படையில் மருந்துகளை எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீட்டுச் சாப்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.