புதுதில்லி: தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானதல்ல என்று தில்லியில் நடந்த இஸ்லாமிய பண்பாடு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு ஐந்து நாட்கள் அரசுமுறைப் பயணமாக ஜோர்டான் மன்னர் அப்துல்லா வருகை தந்துள்ளார். இந்நிலையில் வியாழனன்று தில்லியில் "இஸ்லாமிய பாரம்பரியம்: புரிந்துணர்வை வளர்த்தலும், நவீன மயமும்" என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பிரதமர் மோடி மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா இருவரும் பங்கேற்றனர். அப்பொழுது மோடி பேசியதாவது:
தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்பது எந்த மதத்துக்கும் எதிரானதல்ல; இளைஞர்களைத் தவறாக வழி நடத்தும் மனநிலைக்கு எதிரானது மட்டுமே.
உலகத்தின் எல்லா பெரிய மதங்களுக்கும் இந்தியா தொட்டிலாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் ஜனநாயகம் என்பது நமது பழமையான பன்முகத்தனமையின் கொண்டாட்டம்தான்.
எல்லா மதங்களுமே மனித மாண்புகளை வளர்க்கின்றன. அந்த வகையில் இஸ்லாமில் உள்ள நல்ல மாண்புகளோடு இளைஞர்கள் தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் நவீனத்தினை அதனோடு இணைப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஜோர்டான் மன்னர் அப்துல்லா பேசியதாவது:
நம்பிக்கையே மனித இனத்தை ஒன்றிணைக்கும்.அதுவே நம்மை நலமுடன் வாழ வைக்கும். எனவே வெறுப்பை பரப்பும் குரல்களை மக்கள் ஒதுக்க வேண்டும். கலவரங்களுக்கு எதிரான வலிமையான தடுப்பு என்பது ஒன்றிணைந்து செயல்படுவதுதான்.
இவ்வாறு மன்னர் அப்துல்லா தெரிவித்தார்.