பல்ராம்பூர்: உத்தரப் பிரதேசத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஒன்றின் தலைமைக் காசாளரது உடல் கால்வாய் பாலத்தின் கீழ் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌ நகருக்கு உட்பட்ட, பெஹார் பகுதி பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் தலைமைக் காசாளராக இருந்தவர் ரோஹித் ஸ்ரீவஸ்தவா (28).
இவரது உடல் புதனன்று பல்ராம்பூர் மாவட்டத்தின் மங்காபூர் சாலையில் உள்ள கால்வாய் பாலம் ஒன்றின் கீழ் நீரில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதே பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் வைர வியாபாரி நீரவ் மோடி ரூ.12000 கோடி அளவில் மோசடியில் ஈடுபட்டதே நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தலைமைக் காசாளர் ஒருவரின் மர்ம மரணமானது மேலும் கேள்விகளை எழுப்பி உள்ளது.