இந்த வெற்றி எங்களுக்கு 2019 தேர்தலுக்கு ஊக்கமளித்துள்ளது: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா

இந்த 3 மாநில தேர்தல் வெற்றி அடுத்து நடைபெறவுள்ள 2019 தேர்தலுக்கு ஊக்கமளித்துள்ளதாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி எங்களுக்கு 2019 தேர்தலுக்கு ஊக்கமளித்துள்ளது: பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்குான பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. மேகாலயாவில் இழுபறி நீடித்து வருகிறது.

திரிபுராவில் 41 இடங்களில் முன்னிலையுடன் பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இதன்மூலம் அங்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்தியாவில் இனி இடதுசாரிகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் எங்களுடன் கூட்டணி அமைத்த கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமிளிக்கப்படும் என்பதை உறுதிபடுத்துகிறேன்.

ஒருவேளை மேகாலயாவில் பாஜக ஆட்சி அமைக்க இயலாவிட்டாலும் நாடு முழுவதும் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுவதை நினைத்து பெருமைப்படுகிறேன். இன்னும் கேரளா, ஒடிஸா மற்றும் மேற்கு வங்கம் மட்டும் தான் மீதமுள்ளது.

இந்த மாபெரும் வெற்றி அளித்த உற்சாகத்துடன் கர்நாடக தேர்தலைச் சந்திக்க உள்ளோம். எனவே கர்நாடகத்திலும் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் இந்த வெற்றி அந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக-வுக்கு தொடர்ந்து கிடைத்து வரும் இந்த வெற்றி 2019-ல் நடைபெறவுள்ள தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமளித்துள்ளது. இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் போதிய வளர்ச்சியை அடையவில்லை என்று கூறிய பிரதமர் அங்கு நலத்திட்டப் பணிகளை துரிதப்படுத்தினார். இது அந்த திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்றார்.

அதுமட்டுமல்லாமல் தனது பாட்டியின் உடல்நிலை காரணமாக அவரை சந்திக்க காங்கிரஸ் தலைவர் ராகுல், இத்தாலி சென்றுள்ளார். இதை அவர் தன் சமூக வலைதளப்பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அங்கு மார்ச் 4-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதை குறிக்கும் விதமாக, இத்தாலியில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்கவே காங்கிரஸ் தலைவர் ராகுல் அங்கு சென்றுள்ளதாக அமித்ஷா சுட்டிக்காட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com