வருகிற 2019 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க 3-வது அணி ஒன்று தேவை என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளதற்கு ஏஐஎம்எம் கட்சித் தலைவர் அசாசூதின் ஓவைஸி ஞாயிற்றுக்கிழமை ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஓவைஸி மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒரு மாற்றம் தேவை என்னும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கருத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். தேசிய அளவில் அந்த இரு கட்சிகளுக்கும் மாற்று இல்லாத காரணத்தால் அது இத்தனை நாள் தள்ளிப்போனது. ஆனால் தற்போது அதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்த 3-ஆவது அணி அமைக்க நான் ஆதரவு தெரிவிக்கிறேன். கடந்த 4 ஆண்டுகளாக சந்திரசேகர ராவ் தெலுங்கானா மாநிலத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார். எனவே அவரால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியம் என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க 3-வது அணி ஒன்று தேவை என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது,
காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆட்சியில் இதுவரை என்ன நன்மை ஏற்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியயோடு, தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டுக்கு ஒரு அரசியல் மாற்றம் தேவைப்படுகிறது. இந்த இரு கட்சிகளையும் தோற்கடிக்க ஒரு 3-வது அணி அவசியம் என்றார்.
முன்பு மொரார்ஜி தேசாய், பி.வி.சிங், தேவகவுடா ஆகியோரின் சிறப்பான ஆட்சியை யாராலும் மறக்க முடியாது. அதேபோன்று ஒரு சிறப்பான ஆட்சியை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் அல்லாத ஒரு அணியால் தரமுடியும். வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் சந்திரசேகர ராவ் கூறினார்.