பெங்களூரு: இந்த தேர்தலில் வடகிழக்கு மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்து விட்டனர் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் தும்கூருவில் அமைந்துள்ள ராமகிருஷ்ண விவேகானந்த ஆஸ்ரமத்தில், ஞாயிறன்று சகோதரி நிவேதிதாவின் 150-ம் ஆண்டு பிறந்ததின விழா நடந்தது. பிரதமர் மோடி பெங்களூருவில் இருந்தபடியே இந்த விழாவில் வீடியோ கான்பிரஸிங் மூலம் உரையாற்றினார். தனது உரையில் அவர் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. வடகிழக்கு மாநில மக்கள் வெறுப்பு அரசியலை நிராகரித்து, ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமரவைத்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் இதற்கு முன் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுகள் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகியே இருந்தன. ஆனால், என்னுடைய அரசு அதை எல்லாம் விலக்கி, வடகிழக்கு மாநிலங்களை மைய நீரோட்டத்தில் இணைக்கவே முயற்சித்தது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாட்டில் உள்ள அனைத்து பகுதி மக்களும் ஒன்றாக இருக்க வேண்டும்என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறது. அதனுடன் யாரும் தங்கள் தனிமைப்பட்டதாக உணர்ந்துவிடக்கூடாது என்ற நினைப்பிலும் பணியாற்றி வருகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், தீவிரவாதத்துக்கு சரியான பதிலடி தர முடியும்.
அதற்கு ஏற்றார்போல் வடகிழக்கு மக்கள் மிகப் பெரிய மாற்றத்தை அளித்துவிட்டார்கள். இந்த மக்கள் அளித்த வெற்றி நாடு முழுவதும் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் ஒரு சூழலை உண்டாக்கி இருக்கிறது.
இவ்வாறு மோடி தன்னுடைய உரையில் பேசினார்.