லாஸ் ஏஞ்சலீஸ்: பாலிவுட் நடிகையான சன்னி லியோன் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்ற தகவலைத் தெரியப்படுத்தியுள்ளார்.
பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன். தற்பொழுது தமிழிலும் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு நிஷா என்ற பெண் குழந்தையினை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
தற்பொழுது விடுமுறைக்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் இருக்கும் அவர் வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்ற தகவலைத் தெரியப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கணவர் டேனியல் வெபர், மகள் நிஷா மற்றும் புதிதாய் பிறந்த இரட்டை ஆண் குழநதைகளுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன் அவர் கூறி இருப்பதாவது:
கடவுளின் திட்டம்! கடந்த வருடம் ஜூன் மாதம் நானும் வெபரும் எங்களது குடும்பத்தினை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கலாம் என்று திட்டமிட்டோம். ஒரு முழுமையான குடும்பத்தினை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் வெகு காலமாகத் திட்டமிட்டு வருகிறோம். தற்பொழுது அசேர் சிங் வெபர் மற்றும் நோவா சிங் வெபர் இருவரின் வருகையினால் அது பூர்த்தியாகி விட்டது.
யாரும் குழம்ப வேண்டாம். அவர்கள் எங்களது குழநதைகளே! வாடகைத் தாய் ஒருவர் மூலம் குழநதைகளை பெற்றுக் கொள்வது என்பதை வெகு காலத்திற்கு முன்பே முடிவு செய்து விட்டோம். மகிழ்ச்சி. அனைவருக்கும் ஆச்சர்யம்!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவரது கணவரும் இந்த புகைப்படத்தினை ட்வீட் செய்துள்ளார்.