புதுதில்லி: பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களின் சர்க்கஸ் வீரர் என்று பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கவுதம் அதானியை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கிண்டல் செய்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் கவுதம் அதானி. இவரது அதானி குழுமமானது மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட், நிலக்கரி மற்றும் கம்மாடிட்டி வணிகம் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளது. வணிக ஆய்வு நிறுவனங்களின் அறிக்கையின்படி அதானி குழுமமானது தங்களது பல்வேறு நிறுவனங்களின் வாயிலாக இந்தியாவின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் இருந்து 90 ஆயிரம் கோடிக்கு மேலாக கடன் பெற்றுள்ளது தெரிய வந்தது
இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களின் சர்க்கஸ் வீரர் என்று கவுதம் அதானியை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கிண்டல் செய்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களின் ட்ரபீஸ் (ஒரு வகை சர்க்கஸ் விளையாட்டு) வீரர் கவுதம் அதானி. கடன்களுக்கு அவர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் ஒரு பொது நல வழக்கை தவிர்க்கவியலாது.
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் ஒருவரை சுவாமி கிண்டலுடன் எச்சரிக்கை செய்து பதிவிட்டிருப்பது ஆச்சர்யத்தினை ஏற்படுத்தி உள்ளது.