பெங்களூரு: விரைவில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள சூழ்நிலையில், கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் உபேந்திரா தான் துவக்கிய கட்சியிலிருந்தே ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் உபேந்திரா. சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதியன்று, 'கர்நாடகா பிரக்ஞன் ஜனதா கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். அப்பொழுது அவர் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் வாக்குறுதிகளைக் கொடுக்கிறாரகள். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில்லை என்று குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் விரைவில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ள சூழ்நிலையில், உபேந்திரா தான் துவக்கிய கட்சியிலிருந்தே ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது:
என்னுடைய ராஜிநாமாவை கர்நாடகா பிரக்ஞன் ஜனதா கட்சிக்கு அனுப்பி வைத்து விட்டேன். தேர்தல் ஆணையத்தில் விரைவில் என்னுடைய புதிய கட்சியான 'ப்ரஜாக்கீயா' கட்சியினை பதிவு செய்வேன். வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் போட்டியிடுவேன்.
நான் அரசியலுக்கு வந்ததன் மூலம் பணம் புகழ் சம்பாதிப்பதை விட அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதே எனது நோக்கம்.
கட்சி எதற்காகத் துவக்கப்பட்டதோ அதற்கு மாறாக செயல்பட்டு சிலர் கட்சியில் இருந்து விலகி விட்டனர். கட்சி நிர்வாகிகள் தேர்வு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் கட்சித் தொண்டர்களுக்குத் திருப்தியில்லை.
விரைவில் துவக்கப்பபட உள்ள 'ப்ரஜாக்கீயா' கட்சியானது வெளிப்படையான நிர்வாகம், சுகாதாரம்,கல்வி மற்றும் பொதுமக்கள் நலனில் கவனம் செலுத்தும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.