மும்பை: நீரவ் மோடி நிறுவனத்திற்கு ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் சார்பாக அளிக்கப்பட்டுள்ள ரூ.1000 கோடி கடனை வசூலிக்க, கண்ணுக்கு எட்டிய வரை வாய்ப்பில்லை என்று அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பி.என்.பி வங்கியிடம் இருந்தும், அவ்வங்கி மூலம் பெறப்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் பல வங்கிகளிடம் இருந்து ரூ. 118000 கோடி அளவில் மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெஹுல் சோக்ஷி இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர்.
இந்நிலையில் மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறையின் கீழ் செயல்படும் தீவிர குற்றங்களுக்கான விசாரணை அலுவலகமானது புதனன்று ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கிகளின் தலைவர்களையோ அல்லது மூத்த அதிகாரிகளையோ நேரில் ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்தது.
அங்கு வைர வியாபாரியான நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரும் தொழில் கூட்டாளியுமான மெஹுல் சோக்ஷி ஆகிய இருவருக்கும், எவ்வளவு ரூபாய் கடனாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு கோரப்பட்டிருந்தது. அதன்படி ஐசிஐசிஐ வங்கி செயல் இயக்குநர் கண்ணன் மற்றும் ஆக்சிஸ் வங்கியின் துணை மேலாண்மை இயக்குனர் ஸ்ரீனிவாசன் ஆகியஇருவரும் அந்த அலுவலகத்தில் ஆஜராகி இருந்தனர்.
அதில் தங்கள் வங்கிக்கு ரூ.800 கோடியினை நீரவ் மோடி தர வேண்டி உள்ளதாக கண்ணனும், ரூ.200 கோடியினை நீரவ் மோடி தர வேண்டி உள்ளதாக ஸ்ரீனிவாசனும் விசாரணை அலுவலகத்தில் தெரிவித்தனர். ஆனால் இருவருமே ரூ.1000 கோடி கடனை வசூலிக்க கண்ணுக்கு எட்டிய வரை வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.