தெலுங்கு தேசம் கட்சியும், பாஜகவும் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணி அமைத்து அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று ஆட்சியமைத்தன. இதையடுத்து மத்தியில் தெலுங்கு தேசம் கட்சியும், மாநிலத்தில் பாஜகவும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு நிலவியது. இது 2018-19 நிதியாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அம்பலமானது.
கூட்டணிக் கட்சி என்ற முறையிலும், மூத்த அரசியல்தலைவர் என்கிற முறையிலும் இவ்விவகாரம் தொடர்பாக நேரில் பேசுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நான் பலமுறை தொடர்புகொள்ள முயற்சி செய்தும் பலனில்லை. எனவே, எங்கள் கட்சியைச் சார்ந்த மத்திய அமைச்சர்கள் அசோக் கஜபதி ராஜு மற்றும் ஒய்.எஸ்.சௌத்ரி ஆகியோர் அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்கின்றனர் என்றார்.
இதற்கிடையில், ஆந்திர மாநிலத்தை மத்திய அரசு ஒருபோதும் நிராகரித்ததில்லை. இது தேவையற்ற ஒரு குற்றச்சாட்டு. ஆந்திர அரசுக்கு மத்திய அரசு செய்து கொடுப்பதாகக் கூறிய அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் பலவகையிலும் அம்மாநிலத்துக்கு மத்திய அரசு உதவியுள்ளது என்று பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனிடையே பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.