மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் 1.1 கோடி மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 5 சதவீத அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத்தில் இருந்து இந்த அகவிலைப்படி கணக்கிடப்படும். இதன் மூலம் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61.17 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். இதன் மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.6,077.72 கோடி கூடுதல் செலவு ஏற்படும். 7-ஆவது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளின்படி இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.