ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அதிகராத்தைப் பயன்படுத்தி முறைகேடாக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இவ்வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதில், கார்த்தி சிதம்பரம் பிப்ரவரி 28-ந் தேதி சென்னை விமானநிலையத்தில் சிபிஐ தரப்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணை தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சுனில் ராணா தலைமையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, கார்த்தி சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை மேலும் 3 நாட்கள் நீட்டித்து வருகிற 12-ந் தேதி வரை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அதில், இவ்வழக்கு தொடர்பாக சில சிடி பதிவுகளை சிபிஐ கைப்பற்றியுள்ளதாகவும், இதுதொடர்பாக ஃபாரன்ஸிக் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதால் காவல் நீடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பிப்ரவரி 28-ந் தேதி கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், இந்த உத்தரவின் அடிப்படையில் தொடர்ந்து 15 நாள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.