நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி ஃபரூக் தாக்லாவை சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை கைது செய்தனர். துபையில் இருந்து தில்லிக்கு வந்த அவர், விமான நிலையத்தில் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர் ஃபரூக் என்பதும், அவர் இவ்வளவு காலமாக வெளிநாட்டில் பதுங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஃபரூக்கை விரைவில் தங்களது காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஃபரூக் தாக்லாவுக்கும் முக்கியத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்ய பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், அதற்கு முன்னதாகவே, அவர் வெளிநாட்டில் தஞ்சமடைந்து விட்டார். அதன் தொடர்ச்சியாக ஃபரூக்கைக் கைது செய்ய இன்டர்போல் சர்வதேச போலீஸாரின் உதவியை நாடியது இந்தியா. இந்த சூழலில், துபையில் இருந்து தில்லிக்கு அவர் வரவுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தில்லி, இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விரைந்தனர். அங்கு வந்த ஃபரூக்கை அவர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.