தெலுங்கு தேசம் மத்திய அமைச்சர்கள் ராஜிநாமா

தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.செளதரி ஆகிய இருவரும் மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தனர்.
தெலுங்கு தேசம் மத்திய அமைச்சர்கள் ராஜிநாமா

பாஜக கூட்டணியில் தொடர்வதாக அறிவிப்பு
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ்.செளதரி ஆகிய இருவரும் மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தனர். அவர்கள் தங்கள் ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மோடியிடம் வியாழக்கிழமை அளித்தனர்.
அதே நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் உள்ள ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தர மத்திய அரசு மறுத்ததை அடுத்து, தங்கள் கட்சியைச் சேர்ந்த இரு மத்திய அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகுவார்கள் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை அறிவித்தார்.
உணர்வுப்பூர்வமான பிரச்னை: தில்லியில் பிரதமர் மோடியிடம் ராஜிநாமா கடிதத்தை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ். செளதரி ஆகியோர் கூறியதாவது:
'சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பது ஆந்திர மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்னை. ஆனால், மத்திய அரசு இதற்கு உரிய முறையில் தீர்வுகாணவில்லை. மத்திய அரசு அளிக்கும் சிறப்பு நிதி, மாநிலத்தின் தேவைக்குப் போதுமானது இல்லை. அதே நேரத்தில் மத்திய அரசு, புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலத்துக்கு எதையுமே செய்யவில்லை என்று கூறுவதும் நியாயமில்லை.
கூட்டணியில் தொடர்வோம்: தவிர்க்க முடியாத சூழ்நிலையில்தான் நானும், செளதரியும் அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளோம். அதே நேரத்தில் தெலுங்கு தேசம் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவித்தனர். கூட்டணியை திருமணத்துடன் ஒப்பிட்ட செளதரி, 'திருமணங்கள் நடைபெறும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் விவாகரத்து நடைபெறும்போது மகிழ்வதில்லை. ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் விவாகரத்துகளை மேற்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. நாங்கள் அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டோம். அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் தொடர்வது என்று எங்கள் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முடிவெடுத்துள்ளார். நாங்கள் இனி எம்.பி.யாக நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படுவோம். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கண்டிப்பாக கிடைக்கும் என்று நம்புகிறோம். அதற்காக தொடர்ந்து பாடுபடுவோம்' என்றார்.
ராகுலின் வாக்குறுதி?: தாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து தருவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளது தொடர்பான கேள்விக்கு, 'இது வெறும் ஊகங்களின் அடிப்படையிலானது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அனைவரையும் அனுசரித்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, இதுபோன்ற சூழ்நிலைகளையும் (அமைச்சர்கள் விலகல்) அவர்கள் எதிர்கொள்ளத்தான் வேண்டும். இதுவும் ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான்' என்று ஒய்.எஸ்.செளதரி பதிலளித்தார்.
மத்திய அரசில் அசோக் கஜபதி ராஜு, விமானப் போக்குவரத்து துறை அமைச்சராகவும், ஒய்.எஸ்.செளதரி, அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சராகவும் இருந்தனர். தெலுங்கு தேசம் கட்சிக்கு மக்களவையில் 16 எம்.பி.க்கள் உள்ளனர்.
நெருக்கடி காரணமாகவே விலகல்- பாஜக


நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அனந்த் குமார் இது தொடர்பாக கூறியதாவது:
ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து நாங்கள் தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடத்திவந்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட தவறான பிரசாரம் மற்றும் அவர்களின் நெருக்கடி காரணமாக மத்திய அமைச்சரவையில் இருந்து விலக சந்திரபாபு நாயுடு முடிவெடுத்து விட்டார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆந்திரத்தில் அரசியல் சூழ்நிலையைக் கெடுத்து வருகின்றன. ஆந்திரத்துக்கு சிறப்பு நிதியாக ரூ.14,500 கோடியும், கூடுதல் நிதியாக ரூ.5,000 கோடியும் மத்திய அரசு அளித்துள்ளது. ஆந்திர மக்கள் நலனில் மோடி அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றார் அவர்.
மோடி - நாயுடு தொலைபேசியில் பேச்சு


பிரதமர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடுவை வியாழக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. முன்னதாக, புதன்கிழமை தங்கள் கட்சி அமைச்சர்களின் விலகல் முடிவை செய்தியாளர்களிடம் அறிவித்த சந்திரபாபு நாயுடு, இது தொடர்பாக தகவல் தெரிவிக்க பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவருடன் பேச முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
ஆந்திர அமைச்சரவையில் இருந்து பாஜக விலகல்
தெலுங்கு தேசம் கட்சியின் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரு பாஜக அமைச்சர்களும் ராஜிநாமா செய்துவிட்டனர். சுகாதாரத் துறை அமைச்சர் காமினேனி ஸ்ரீனிவாச ராவ், அறநிலையத் துறை அமைச்சர் டி.மாணிக்யால ராவ் ஆகியோர் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் வியாழக்கிழமை தங்கள் ராஜிநாமா கடிதத்தை அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com