பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக வெள்ளிக்கிழமை இரவு இந்தியா வந்தடைந்தார். அவருக்கு புதுதில்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்பு அளித்தார். பின்னர் தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை காலை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்விரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, அணுசக்தி, கல்வி, ரயில்வே, கட்டமைப்பு உள்ளிட்ட 14 துறைகளின் முக்கிய ஒப்பந்தங்கள் சனிக்கிழமை கையெழுத்தாகின.
மேலும், மேக் இன் இந்தியா திட்டத்தில் பிரான்ஸ் நாட்டை முதலீடு செய்யுமாறும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு, ராணுவம் மற்றும் அணுசக்தி துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளன. இதில் இருவரின் பங்களிப்பும் அதிகளவில் இருக்கும் என்றார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக போராட இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளன. பயங்கரவாதத்தை ஒழிப்பதே இருநாட்டின் இலக்கும். இந்த ஒப்பந்தங்களின் மூலம் இந்தியா மற்றும் பிரான்ஸின் பாதுகாப்புத்துறை புதிய உச்சத்தை அடைந்துள்ளது என்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.