தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் உள்ள ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து தர மத்திய அரசு மறுத்ததை அடுத்து, அக்கட்சியைச் சேர்ந்த இரு மத்திய அமைச்சர்களும் பதவியில் இருந்து விலகுவார்கள் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.
இதையடுத்து தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ். செளதரி ஆகியோர் தங்கள் ராஜிநாமா கடிதத்தை அளித்தனர். அதே நேரத்தில் ஆந்திர மாநில அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இரு பாஜக அமைச்சர்களும் ராஜிநாமா செய்துவிட்டனர்.
இருப்பினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வது என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில், அசோக் கஜபதி ராஜு நிர்வகித்து வந்த விமானப் போக்குவரத்து அமைச்சரவையை மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு ஒதுக்குமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சிபாரிசு செய்தார்.
எனவே மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விமானப் போக்குவரத்து அமைச்சரவையை இனி கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.