காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் விஜிலா சத்யானந்த், 'தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மத்தியில் காவிரி நதி நீர் மேலாண்மை மற்றும் பகிர்வுக்கான ஒரு செயல் திட்டத்தை உருவாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மாநிலங்களவையில் அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில் விவரம்: காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மீது 16.2.2018 அன்று உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. மேலும், தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியான தேதியில் இருந்து ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு மூலம் ஐஎஸ்ஆர்டபிள்யூடி சட்டம் 1956-இன் 6ஏ பிரிவின் கீழ் ஒரு செயல்திட்டம் ('ஸ்கீம்') உருவாக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தால் திருத்தப்பட்டுள்ளதால், தீர்ப்பாயத்தின் உத்தரவை செயல்படுத்துவதற்காக ஒரு செயல் திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடனான பரிமாற்றமும் அடங்கும் என்று அதில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.