சரக்கு-சேவை வரி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை சரி செய்ய கடந்த டிசம்பர் மாதம் வரை ரூ.28,398 கோடி இழப்பீட்டுத் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பு ஈடு செய்யப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்திருந்தது. கடந்த ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மொத்தம் ரூ.28,398 கோடி பல்வேறு மாநிலங்களுக்கு இழப்பீடாக அளிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக கர்நாடகத்துக்கு ரூ.4,130 கோடியும், பஞ்சாபுக்கு ரூ.2,838 கோடியும், குஜராத் மாநிலத்துக்கு ரூ.2,532 கோடியும், பிகாருக்கு ரூ.2,119 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.1,911 கோடியும், உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.1,520 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
மறைமுக வரி மூலம் ரூ.9,26 லட்சம் கோடி கிடைக்கும் என்று பட்ஜெட்டில் அரசு மதிப்பிட்டிருந்தது. ஆனால் ரூ.8.75 லட்சம் கோடி மட்டுமே வரி வசூலாகியுள்ளது. இது ரூ.51,856 கோடி குறைவாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.