வரும் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
முன்னதாக, மத்திய பட்ஜெட்டுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் 2018-19ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவீதம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக உலக வங்கியின் அரையாண்டு அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
வரும் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக இருக்கும். அடுத்த (2018-2019) நிதியாண்டில் இது 7.3 சதவீதமாகவும், 2019-2020-இல் 7.5 சதவீதமாகவும் உயரும்.
இந்தியாவில் தொடர்ந்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதாலும், சர்வதேச பொருளாதாரத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலமும் அங்கு பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களும் திறம்பட செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒருங்கிணைந்த வளர்ச்சி சாத்தியமாகும்.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை, சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல் ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டுவிட்டது. பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் 5.7 சதவீதமாகக் குறைந்தது. எனினும், அடுத்த வந்த காலாண்டுகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.