குக்கர் சின்னம் விவகாரம்: இபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

குக்கர் சின்னம் தொடர்புடைய வழக்கில் தில்லி உயர் நீதிமன்ற உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

குக்கர் சின்னம் தொடர்புடைய வழக்கில் தில்லி உயர் நீதிமன்ற உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
முன்னதாக குக்கர் சின்னம் கோரி டி.டி.வி.தினகரன் தாக்கல் செய்த மனுவில், 'இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் அணி, புதிய பெயரில் இயங்கும் வகையில் கட்சியின் பெயரை ஒதுக்குவதற்கும், குக்கர் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அனுமதி அளிப்பதற்கும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என டி.டி.வி. தினகரன் தரப்பில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கில் டி.டி.வி. தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி ரேகா பாலி கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். 
இந்நிலையில், டி.டி.வி. தினகரன் சார்பில் திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் தனித் தனியாக கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களான தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் மேல்முறையீடு செய்தால், தனது கருத்தையும் கேட்க வேண்டும்' என்று டி.டி.வி. தினகரன் கோரியிருந்தார்.
மேல்முறையீடு: இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதில், 'டி.டி.வி. தினகரன் அணிக்கு குக்கர் சின்னமும், கட்சி பெயரையும் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்த தில்லி உயர் நீதிமன்ற உத்தரவை செல்லாது என அறிவிக்க வேண்டும். டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வகையில், அவருக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டது. சுயேச்சை உறுப்பினராக உள்ள நபருக்கு சின்னத்தை ஒதுக்குவது முறையல்ல' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com