குறைந்தப்பட்ச இருப்புத் தொகை இல்லாத 41.16 லட்சம் கணக்குகளின் சேவையை பாரத ஸ்டேட் வங்கி ரத்து செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய வங்கியாக திகழும் எஸ்.பி.ஐ., தனது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்தப்பட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவில்லையெனில், அதற்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் அறிமுகப்படுத்தியது. அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்ட இந்நடவடிக்கையை மீண்டும் எஸ்.பி.ஐ. கொண்டு வந்தது. இருப்பினும், இந்த அபராதத் தொகையை எஸ்.பி.ஐ. வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் 75 சதவீதம் வரை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் எத்தனை பேர் தங்களது கணக்குகளை ரத்து செய்துள்ளனர் என்று எஸ்.பி.ஐ. வங்கியிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கௌத் என்பவர் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு எஸ்.பி.ஐ. வங்கி கடந்த மாதம் 28ஆம் தேதி தனது பதிலை அளித்துள்ளது.
அந்தப் பதிலில், 'கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலும், குறைந்தப்பட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்கள் 41.16 லட்சம் சேமிப்பு கணக்குகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.